Thursday, September 18, 2014

கல்வி என்றும் நடுநிலையானதல்ல


170 மீட்டர் நீளம், 60 செண்டிமீட்டர் அகலம் கொண்ட கொடுஞ்சிறைக் கொட்டடியில் அந்த மனிதன் சிந்தித்து கொண்டிருந்தான். தான் பிறந்த நாட்டில் தன் குடிகளுக்கான எழுத்தறிவு இயக்கத்தில் 30 நாளில் சுமார் 500க்கும் அதிகமான கரும்பு விவசாயிகளுக்கு எழுத்தறிவித்ததுதான் அம்மனிதர் செய்த குற்றம். எழுத்தறிவித்ததற்காக நாடும் கடத்தப்பட்ட அம்மனிதர் பிரேசில் நாட்டு கல்வியாளர் பாவ்லோ பிரையரே. “இன்றைய கல்வி முறை எடுத்துக்கூறுதல் என்னும் நோயால் அவதியுறுகிறது? என்றவர். மூன்றாம் உலக நாடுகளில் மாற்றுக் கல்விக்கான தந்தை எனவும் இவர் புகழப்படும் இவரது கூற்று, இன்றும் உண்மையாக இருக்கிறது, வெளிவந்த சில ஆண்டுகளிலேயே 13 மறுபதிப்புகள், ஏழரை இலட்சம் பிரதிகள் என விற்றுத் தீர்ந்த இன்று பொன்விழாவை எட்டும் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை (PEDAGOGY OF THE OPPRESSED) என்னும் நூலாசிரியர். இந்நூல் மாற்றுக் கல்வி வேண்டுவோரின் வேத நூல் என்று வர்ணிக்கப்படுகிறது.


இன்றைய கல்வி முறையில் ஆசிரியர் பேசிக் கொண்டேயிருப்பார். மாணவர்கள் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். மாணவனுக்கு எதுவும் தெரியாது. ஆசிரியர் சிந்திப்பவர். மாணவர் சிந்திக்க வைக்கப்படுபவர். மாணவன் எதைச் சிந்திக்க வேண்டும் என்பதை ஆசிரியரே தீர்மானிப்பார். ஆசிரியர் தகவல் களஞ்சியம், அதனைத் தவணை முறையில் பெறக் கடமைப்பட்டவர் மாணவர். மாணவனின் சிந்தனைத் திறனுக்கும், படைப்பாற்றல் திறனுக்கும், கேள்வி கேட்கும் மனப்பாங்குக்கும் இன்றைய கல்வி முறை எதிரானது. உரையாடலுக்கு இடம் கொடாதது. இதனால் வகுப்பறைகளில் ஒரு மௌனம் குடிகொண்டிருக்கிறது. இந்த மௌனம் ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்துவிட்டது. ஒழுங்கின் வடிவமாகவும் உள்ளது. இவ்வாறு அமைந்துள்ள வகுப்பறைகளில் கொடுங்கோலாட்சியே நடைபெறும். இன்றைய கல்வி முறை “ வங்கி கல்வி முறை கல்வியாகஉள்ளதன் விளைவு இது என்கிறார் பாவ்லோ பிரையரே. வங்கியில் எவ்வளவு பணம் ஒருவர் வைத்திருக்கிறாரோ, அவ்வளவு பணமே அவர் எடுக்க முடியும். அது போல் ஆசிரியர், தான் சேகரித்து வைத்துள்ள தகவல்களை எடுத்துக் கூறுதல் மட்டுமே அவரது கடமை.  எந்த அளவு மாணவனுக்கு சென்று சேர்கிறது என்பதற்கு இதில் எந்த உத்தரவாதமும் இல்லை. மொத்தத்தில் இன்றைய கல்வி ஒரு ஒடுக்குமுறைக்கான கருவி”  என்றார் அவர்.

        இன்றைய கல்வி முறையின் மீது கடும் விமர்சன்ங்களை மட்டும் வைத்தவர் அல்ல, அவர். அதற்கு ஓர் மாற்றத்தையும் முன் வைத்தவர். அதற்காக கடுமையாக உழைத்தவர்; கள ஆய்வுகளையும் மேற்கொண்டவர். பிரேசில் நாட்டின் கல்வி கற்றிராத கரும்பு விவசாயிகளிடம், உரையாடல் வழியாக, சிந்திக்கத் தூண்டும் எழுத்தறிவினை எப்படிப் போதிப்பது என்றும் கண்டறிந்தார். தனது மாற்றுக் கல்வி முறைக்கு “பிரச்சனை அடிப்படையிலான கல்வி முறை (Critical pedagogy)”  என பெயரிட்டார்.


        பிரையரேவின் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர் உறவுமுறை கூட அடிப்படையிலேயே வேறுபடுகிறது. இக்கல்வித் திட்டத்தில் ஆசிரியர் பாடம் நடத்துபவராகவும், மாணவர் அதை கேட்பவராகவும் இருக்க முடியாது. மாறாக இருவரும் இணைந்து ஒரு பிரச்சனைக்கு தீர்வை தேடுவர். வகுப்பறைக்குள் எடுத்து இயம்புதல் என்பதற்கு பதிலாக, கலந்துரையாடல் நிகழும். இதில் ஆசிரியர் மாணவராகவும், மாணவர் ஆசிரியராகவும் இருப்பார். ஆசிரியர் தன்னைத்தானே 50 விழுக்காடு தற்கொலை செய்து கொண்டு, மாணவராக விளங்க வேண்டும். மாணவரும் 50 விழுக்காடு ஆசிரியராக இருக்க வேண்டும். ஆசிரியர் என்பவர் வெறும் ஆசிரியர் அல்ல, ஆசிரிய – மாணவர். அதே போல மாணவனும், மாணவ- ஆசிரியனே. இத்தகைய வகுப்பறயில் அதிகாரம் இற்று வீழவும், தோழமை கோலோச்சவும் காணலாம். கற்பித்தலும்-  கற்றலும் வேறு வேறு நிகழ்வாக இல்லாததையும் காணலாம். இத்தகைய வகுப்பறையில் மௌனக் கலாச்சாரம் இயல்பாக உடைபடும். மௌனக் கலாச்சாரம் நொருங்கும் இடத்திலிருந்தே கற்றல் தொடங்கும் என்கிறார் பாவ்லோ பிரையரே. மௌனக் கலாச்சாரம் உடைபடும் புள்ளியில்தான் வகுப்பறை சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும், அன்னியத்தன்மை, பயம் நீங்கவும் பெறும்.

பாவ்லோ பிரையரேவின் 15 ஆண்டு கடும் உழைப்பில் உருவான பிரச்சனை அடிப்படையிலான கல்வி முறைதான் உலக எழுத்தறிவு இயக்கத்திற்கு வித்திட்டது எனலாம். உலகின் பல நாடுகளின் எழுத்தறிவுக்கான சட்டங்கள் இயற்றப்படக் கூட இவரது ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை நூல் அடிப்படையாக அமைந்தது. தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் பற்றிப் படரவும் கூட பாவ்லோ பிரையரேவின் கல்வி முறை பயன்பட்டது. எழுத்தறிவு அற்ற மக்களிடம், “பட்டா படி போன்ற எளிமையாக எழுதக் கூடிய, வாசிக்க கூடிய, அவர்களது வாழ்க்கையோடு ஒட்டிய விழிப்புணர்வை  தூண்டக்கூடிய வார்த்தை வடிவமைப்புகளுக்கு பிரையரேவே வெளிச்ச ரேகைகளைப் பாய்ச்சினார்.

நம்மில் பலரும், நமது கல்வி முறை நடுநிலையோடுதான் இருக்கிறது, ஆசிரியரும் நடுநிலையோடுதான் இருக்கிறார் என நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் “கற்றல் ஒரு அரசியல் செயல்பாடு. ஆசிரியர் நடுநிலையோடு இருக்க முடியாதுஎன ஓங்கி ஒலித்தவர். அதுமட்டுமல்லாது அறிதல் என்பதும் ஓர் அரசியல் செயல்பாடுதான் என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவிற்கு ஒரு முறை வந்திருந்த அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கினார். “ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கணக்குப் பாடத்தில் பயிற்சி அளிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்; உன் கையில் ரூ.100 இருக்கிறது. அதை வங்கிக் கணக்கில் போட்டு வைக்கிறாய். 3 சதவீத வட்டிக்கு 6 மாதம் வங்கியில் போட்டு வைத்தால், ஆறு மாதம் கழித்து எவ்வளவு பணம் கிடைக்கும்என்கிறார். இந்தக் கணக்கின் மூலம் முதலாளித்துவ பொருளாதார முறைமையையும் சேர்த்துத் தானே சொல்லித் தருகிறீர்கள் என கேட்டார். ஆசிரியர் ஒரு கலாச்சார செயல்பாட்டாளர் என்பதையும் வலியுறுத்தி “TEACHERS ARE CULTURAL WORKERS” என்ற நூல் ஒன்றையும் எழுதினார்.

எழுதுதல், வாசித்தல், மறுவாசிப்புச் செய்தல், எழுதியதை மீண்டும் திருத்தி எழுதுதல் என்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தவர் பாவ்லோ பிரையரே. இன்றைக்கும் பலர் வகுப்பறையில் சிற்சில உரையாடல்கள் நிகழ்த்துவதையோ, நகைச்சுவையை அள்ளித் தெளிப்பதையோ, ஆரோக்கியமான உரையாடல் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், பாவ்லோ பிரையரே சொன்ன வழி எனக் கூறிக்கொண்டும் இதே வழியான செயல்பாடுகளை அரங்கேற்றுகின்றனர். இவை இரண்டுமே பாவ்லோ பிரையரே முன்மொழியும் உரையாடல் வழிமுறையல்ல. ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது பிரச்சனையை எடுத்துக் கொண்டு, ஆரோக்கியமான கலந்துரையாடல் வழியாக இலக்கு மாறாமல் அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதே பிரையரே முன்வைக்கும் உரையாடல்.

தமிழ்நாட்டில் பாவ்லோ பிரையரேயும் அவரது கோட்பாடுகளையும் அறிந்திருப்போர் மிகவும் குறைவுதான். பாவ்லோ பிரையரேவின் கல்வி சிந்தனைகள் மனசாட்சி உள்ளோரைப் பிடித்து உலுக்குவன. சிலவற்றை ஆசிரியர் நினைத்தால் உடனடியாக நடைமுறைப் படுத்த முடியும். சிலவற்றை நடைமுறைப்படுத்த ஒத்த கருத்துள்ளோரிடம் விவாதம் தேவைப்படும். சிலவற்றை தற்போது இருக்கும் அரசாங்கங்களை நடைமுறைப்படுத்தலாம். சிலவற்றை அரசுகளும் கொள்கைகளும் மாறினாலே நடைமுறைப்படுத்த முடியும்.

பாவ்லோ பிரையரே வழியில் ஆரோக்கியமான உரையாடல் மூலம் வகுப்புகளை எப்படிக் உயிரோட்டமாக மாற்றுவது என்பதற்கு ஒரு பெரும் வழிகாட்டி நூல் பேரா.ச மாடசாமியின் “எனக்குரிய இடம் எங்கேஎன்னும் ஒரு நூல். தமிழாசிரியராக தனது வாழ்நாள் பயிற்சியின் அனுபவ சாரத்தை தொகுத்துக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என பாடவாரியாக கூடி விவாதிக்க வேண்டும். கையேடுகள் தயார் செய்யப்பட வேண்டும். அல்லது இதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நடைமுறையை அமுல்படுத்தி வருபவர்கள் மாடசாமியைப் போல் எழுதத் தூண்ட வேண்டும்.


கல்வி முறையை முற்றாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல் குழந்தைகளை மையப்படுத்திய கல்வியை பல அமெரிக்க கல்வியாளர்கள் முன்னிறுத்தினர். ஆனால், அத்தகைய கல்வி முறை, விவாதம் மூலம் ஆட்சி அதிகாரத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. ஆனால் பாவ்லோ பிரையரே முன்மொழிந்த கல்வி முறை கல்வி சிந்தனைகள், விவாதங்கள் வழியே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களுக்கு பிரையரேவின் கல்விச் சிந்தனைகளும் கூட ஒரு காரணம் என்கிறார்கள். இயற்பியல் உலகை எப்படி ஐன்ஸ்டீனுக்கு முன், பின் என பிரித்தல் இயலுமோ, அவ்வாறே கல்வி சிந்தனைகளையும் பிரையரேவுக்கு முன், பின் என பிரிக்கலாம்.


கஞ்சி குடிப்பதற்கிலார், காரணம் இதுவென்னும் அறிவிலார் என்னும் நம் பாரதியின் ஏக்கப் பெருமூச்சிற்கு விடை காணும் அவரது புரட்சிகர கல்வி சிந்தனைகளை நடைமுறைக்கு கொண்டுவருதல் சாத்தியமா என அவரையே கேட்டபோது “நாம் நடந்து நடந்தே சாலை அமைத்துவிட முடியும்என பாவ்லோ பிரையரே கூறினார். எழுத்து என்பது அரசியல் திட்டம் சார்ந்த பணி” என்று வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த பாவ்லோ பிரையரே பிறந்தது, 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 19.

1 comments:

periyavijayakumar said...

இன்றைய தமிழகக் கல்விச் சூழலுக்கு பொருந்தும் மிகச் சரியான கட்டுரை. ஃபாவ்லோ பிரெயரை தமிழக மக்களிடையே தொடர்ந்து எடுத்துச் செல்லும் உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் பேராசிரியர் மணி அவர்களே.

Post a Comment