Tuesday, September 9, 2014

அரசுப்பள்ளி மக்கள்பள்ளி, பாதுகாப்போம், பலப்படுத்துவோம். தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளில் அறிவொளி இயக்கம், கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர்களுக்கான இணைசெயல்பாடுகள் உருவாக்குதல், சமச்சீர் பாடத்திட்ட நூல்கள் குறித்த ஆய்வுகள், போன்ற குறிப்பிடத்தகுந்த பணியை தமிழகத்தில் அடிப்படைக் கல்வியில் மேற்கொண்டுள்ளது.

தற்போதும் ஆசிரியர்களுக்கான பல்வேறுதிறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஆசிரியர் இணையம், வாசிப்பு இயக்கம் என தனது பணியை தொடர்ந்து நடத்தி வருகிறது. அரசின் கொள்கைகளாலும், புற்றீசல் போன்ற தனியார் பள்ளிகளின் வளர்ச்சியாலும் காமராஜர் கட்டமைத்த பொதுப்பள்ளி முறைமை என்னும் அரசுப்பள்ளி முறைமை முற்றிலும் செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஒரு நாட்டின் சமூக பொருளாதார அரசியல் நடவடிக்கைகளின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு அடிப்படையாக அமையவேண்டிய வலுவான அரசுப்பள்ளிகள் முற்றிலும் செயல் இழக்கும் நிலையில் உள்ளது. தன் கொள்கைகளாலும் தனியர்மயமாதலாலும் தான் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது என்பதை மறந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  மாணவர் சேர்க்கை குறைவாக  உள்ள ஆறு பள்ளிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நிலைக்கு சென்றுள்ளது தமிழக அரசு .இத்தகைய போக்கு மேலும் மேலும் அரசுப் பள்ளிகளை சீரழிக்கவே பயன்படும். உலகமயமாக்கலுடன் ஒட்டிப் பிறந்த தனியார்மயத்திற்கு முன்பே தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரில் தனியார்மயம் தொடங்கிவிட்டது .கடந்த முப்பது ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் முற்றிலும் லாபத்தை முன்னிறுத்தும் வழியில் செயல்பட்டு, உண்மையான கல்வியியல், கற்றல் நோக்கங்கள் நிராகரிக்கப்பட்டு, மதிப்பெண்களே கல்வி, அல்லது அதுவே தரம் என நிலைநிறுத்தி, தனியார் - அரசு என எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாப் பள்ளிகளும் மதிப்பெண் பின்னால் ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. தொடக்க நடுநிலைப் பள்ளிகள் சில ஆயிரம் வரை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும், மூடப்படும் நிலையில் உள்ள கிராமங்களில் வாழும் ஏழைக் குழந்தைகள் மீண்டும் எழுத்தறிவு அற்ற ஒரு சமூகம் உருவாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

             தாய் மொழி வழிக் கல்வியிலேயே கற்றல் மேம்பட்டு, படைப்பாற்றல் திறன், அத்துடன்  ஆங்கில மொழிப் புலமையும் அதிகரிக்க செய்ய முடியும் என்பதற்கு தமிழகமே மிகச்சிறந்த முன் உதாரணமாக விளங்கியது. சர் சி வி ராமன், ராமானுஜன், சிங்கரவேலர் எனத் தொடங்கி முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மயில் சாமி அண்ணாதுரை என பல உதாரணங்களை கூறிக் கொண்டே செல்லமுடியும். ஆனால் ஆங்கிலம் கற்கவே அனைத்துப் பாடங்களையும் குருட்டு மனப்பாடம் செய்யும் நிலைக்கு தமிழகம் வந்துவிட்டது. மாணவர் சேர்க்கைக்காக ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகம் செய்த பின்னர் இது பற்றியும் பேசியாக வேண்டும். எனவே தமிழக பள்ளிக் கல்வியை சீரழித்துள்ள அரசின் கொள்கைகள் தனியார் பள்ளிகளின் வணிகமயம், என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி தமிழக பள்ளிக் கல்வியை காக்கும் ஒரு பேரியக்கத்தை சர்வதேச எழுத்தறிவு தினமான 08.09.2014 ன்று தொடங்கியது.

இந்த இயக்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "அரசுப் பள்ளி மக்கள் பள்ளி. பாதுகாப்போம். பலப்படுத்துவோம்" என்னும் பெயரைச் சூட்டி உள்ளது. தமிழக மக்களிடம் இச்செய்தியை கொண்டு சேர்க்க ஐந்து பிரசுரங்களை வெளியிட உள்ளோம்மேலும் அரசுப் பள்ளிகளை காக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கிட வேண்டும், தனித்தனி வகுப்பறைகள். வகுப்பிற்கொரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் இவற்றை உறுதிப்படுத்திட வேண்டும், செயல்வழிக்கற்றல், தொடர்மதிப்பீட்டு முறைகளை செழுமைப்படுத்த வேண்டும். நலத்திட்ட உதவிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்திடவும், கல்வியில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும், அதிக நிதி ஒதுக்கி அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்து பலப்படுத்திட வேண்டும். உண்மையான சமச்சீர் கல்விமுறையினை அமல்படுத்திட வேண்டும், மத்திய அரசின்அரசு தனியார் கூட்டுமாதிரிப் பள்ளித்திட்டத்தை நிரந்தரமாக நிராகரிதத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்தி  பத்து லட்சம் கையெழுத்துக்களை பெற்று அரசுக்கு சமர்பிக்க உள்ளோம். அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க  அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், ஆசிரியர், மக்கள் பங்கேற்பை உறுதி செய்திடவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல்கட்சிகளும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் விரிவாக இணைக்க வேண்டும் என்பதும் இப்பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும்.

இவ்வியக்கத்திற்கு வலு சேர்க்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் என இக் கொள்கைக்கு உடன்படும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி செயலாற்ற திட்டமிட்டுள்ளோம். மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம், நூல்விற்பனை கருத்தரங்குகள், மண்டல மாநாடுகள் எனத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்டோபர்,நவம்பர் மாதங்களில் அரசுப் பள்ளி அவலத்திற்கு காரணமானவற்றை கண்டறிய கள ஆய்வுகள் நான்கு தலைப்புகளில் நடத்தப்படும். டிசம்பர் மாதத்தில் ஆய்வு முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் அரசுக்கு சமர்ப்பிப்பது. அதனை நடைமுறைப்படுத்தக் கோருவது, அதனை வீதி நாடகங்கள், பாடல்கள் உள்ளிட்ட கலைப்பயணம் வழியாகவும் மாநிலம் முழுக்க எடுத்துச் செல்வது என இந்தப் பிரச்சார இயக்கத்தில் திடமிடப்பட்டுள்ளது.


அதில் முதல் கட்டமாக பேரா.நா.மணி எழுதியமீண்டெழும் அரசு பள்ளிகள்’ என்னும் நூலை பேரா.வசந்தி தேவி வெளியிட தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அருமைநாதன் பெற்றுக்கொண்டார். ’இவைகளா கனவுப் பள்ளிகள்’ என்னும் தலைப்பில் வணிக மய பள்ளிகளின் செயல்பாட்டை விமர்சித்து பேரா. ராஜமாணிக்கம் எழுதிய நூலை முனைவர். ச. முத்துகுமரன் முன்னாள் துணைவேந்தர் வெளியிட இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்பத்து லட்சம் கையெழுத்து பெரும் இயக்கத்தை பேரா...அறவாணன் துவக்கி வைத்தார். இந்த மாநில அளவிலான பிரச்சார துவக்கவிழா நிகழ்வில்  இவ்வியக்கத்தின் மாநில தலைவர் மணி, மாநில ஒருங்கிணைப்பாளர் தேனி.சுந்தர், மாநில நிர்வாகிகள் உதயன், சி. இராமலிங்கம், சென்னை மாவட்ட அறிவியல் இயக்க செயலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை  சென்னை மாவட்ட அறிவியல் இயக்க குழுவினர் செய்திருந்தனர்.


0 comments:

Post a Comment