கரும்பலகை அழிப்பதற்கு
காகிதம் கேட்டேன்.
கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..
இப்படித்தான்
வீணாய்ப் போகிறது.
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்...
------------------ கரும்பலகையில் எழுதாதவை (பழ. புகழேந்தி)
இடம் : நாமக்கல் மாவட்டம்,
நாமகிரிப்பேட்டை ஒன்றியம்
பள்ளி : ஊத்துப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்
பள்ளி
அந்த கிராமத்தின் மொத்த
மக்கள் தொகையோ 349, அதில் பள்ளி வயதுக் குழந்தைகள் 30. ஆனால் இவ்வூரில் இருக்கும் ஊராட்சி
ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையோ 172. மேற்படி முப்பது
குழந்தைகள் தவிர 142 குழந்தைகள் எங்கிருந்து வருகிறார்கள்? சுற்றுவட்டாரம் நான்கு கிலோமீட்டர்
தொலைவில் இருந்து வருகிறார்கள். நாமக்கல் மாவட்ட, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திலிருக்கும்
ஊத்துப்புளிக்காடு என்னும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கு பெற்றோர் வேன் வைத்து
அனுப்புகிறார்கள். 1999ஆம் ஆண்டு வெறும் 34 குழந்தைகள் மட்டுமே படித்து வந்த இப்பள்ளியில்
சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் 41, 51, 56, 57, 64, 76, 78, 96, 111, 140, 172 என படிப்படியாக
அதிகரித்துள்ளது. உத்துப்புளிக்காடு என்னும் இந்த ஊருக்கே பஸ் வசதியில்லை. ஆனால் சுற்றிலும்
உள்ள கிராமங்களில் இருந்து 20 வேன்களில் இருந்து வந்து செல்கின்றனர் பள்ளி குழந்தைகள்.
எப்படி
இது சாத்தியம் என ஆச்சரியத்தோடு கேட்கும் நம்மிடம் விடாமுயற்சி, கடின உழைப்பு, கடின
உழைப்பு மட்டுமே என்று சுருக்கமாக கூறுகிறார்கள். கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன் என்ற
பிறகு, “எங்கள் பள்ளி காலை 0830 மணிக்கே துவங்கிவிடும். பள்ளி நேரமான 9.15 மணிக்குள்
ஆங்கில வகுப்பை நடத்தி முடித்துவிடுவேன். 5ஆம் வகுப்பு படித்து முடித்து செல்லும் மாணவனுக்கு
ஆங்கிலத்தில் 250 வினைச் சொற்கள் நன்கு தெரிந்திருக்கும். 12 டென்சும் அதன் பயன்பாடு,
வினைச் சொற்களில் பொருத்தி வாக்கியமாக எழுதுவது வரை தெரியும். இதன் வழியாக ஆங்கில பாடபுத்தகத்தில்
கூறப்பட்டுள்ள ஆங்கிலம் மிக எளிமையாக்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஆங்கிலம் நமக்கு வருகிறது; கற்றுக் கொள்ள முடிகிறது என்ற நம்பிக்கை
ஏற்பட்டு, தமிழையும் எளிமையாக கற்கத் தொடங்குகிறார்கள் என்று முடித்தனர்
பள்ளி ஆசிரியர்கள்.
ஆசிரியர்களின்
அணுகுமுறை, கற்பிக்கும் விதம் ஆகியவை 0830 மணிக்கே மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டாலும்
மாலை 4 மணிவரை புத்துணர்வோடு இருக்க உதவுகிறது. இந்த புத்துணர்வுக்கு காரணம் மனப்பாடம்
செய்ய வைக்காமல் பாடங்களை உயிரோட்டமாக புரிந்து கொள்ள வைப்பதே. எல்லாம் எளிதாக கொஞ்சம்
கொஞ்சமாக நகர்கிறது. சுமையின்றி கற்றல் என்பதற்கு பொருள் இருக்கிறது. ஒரு குழந்தைக்கு
10 வார்த்தை தெரிகிறதா? 11 வார்த்தையாக அறிந்து கொள்ள வைப்பது; 12 வார்த்தை தெரியும்
குழந்தைக்கு இன்னும் ஒன்று என்று ஒரு படி மேலே செல்வது என இப்படித்தான் குழந்தைகளின்
கற்றல் ஆற்றலை முன் நகர்த்தி வெற்றிப்பாதைக்கு நகர்த்துகிறார்கள்.
தமிழ்
பாடத்தில் சிலப்பதிகாரப் பாடம் நடத்த வேண்டுமா? புத்தகத்தை எடு, படி, புரிகிறதா எனப்
போவதில்லை. காவிரி ஆற்றில் இருந்தோ, மதுரையில் இருந்தோ துவங்கி, ஒரு கதைபோல சொல்லிச்
செல்கிறார்கள். இக்கதையின் ஊடாக, மேற்படி இடங்கள் சம்பவங்கள் பற்றி குழந்தைகளுக்கு
தெரியும் விசயங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். கதையும் முடியும்போதுதான், புத்தகப்
பாடம் தொடங்குகிறது, “அட, இவ்வளவுதானா? என்று பாடம் எளிமையாகி விடுகிறது.
ஜூன்
மாதம் பள்ளி தொடங்கியவுடன் இம்மாதம் பழகுநர் போல்
வைத்துக் கொள்கிறார்கள், மூன்று, நான்கு மாதங்களுக்கு
வலுவான அடித்தளம் இட்டபிறகு கற்றல் வேகம் பிடிக்கிறது இங்கு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு
வகுப்பிலும் புதுக் குழந்தையாக பாவிக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கிறாய் உனக்கு
இதுகூடத் தெரியவில்லையா? என்ற கேள்விக்கு இப்பள்ளியில் இடமில்லை. அவசரப்படாமல் தெரியாதவற்றை
தெரிவித்து பின் தொடங்குகிறது பாடம்.
மாணவர்களைப் படிக்க வைக்க
சிறந்த ஒரே ஒரு மந்திரத்தைச் சொல்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். பாராட்டிப் பாராட்டியே
படிக்க வைக்கிறோம்’ என்பதே அம்மந்திரம். பள்ளியின் செயல்பாடுகள் பெற்றோர்களுக்கு நன்கு
தெரிவதால், குழந்தைகளுக்கு தேவையானது என பட்டியலிடும் விடயங்களை எளிதாக உடனுக்கு உடன்
பெற்றோர்கள் செய்து கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளோடு போட்டி போட வேண்டிய தேவை இருப்பதால்
தனியாக சீருடை, பெல்ட், அடையாள அட்டை, டைரி என சில பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது.
தனியார் பள்ளிக் கட்டணங்களோடு ஒப்பிடும் போது இந்த செலவுகள் எம்மாத்திரம்?.
இந்தப் பள்ளியின் தலைமை
ஆசிரியர் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை பள்ளியில் இருக்கிறார். பெற்றோர் ஆசிரியர்
சங்கம் சார்பில் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மாதச்சம்பளமாக 3000
ரூபாயினை தலைமை ஆசிரியர் தனது சம்பளத்தில்
இருந்துதான் கொடுக்கிறார். சனி, ஞாயிறுகளில் மாணவர்களை வரச் சொல்லி சிறப்பு
வகுப்புகளை எடுக்கிறார். இது தவிர கையில் இருந்து இரண்டரை லட்சம் செலவு செய்துள்ளார்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அன்றி விடுமுறை எடுப்பதில்லை. ஆனாலும் தான் பள்ளி
வளர்ச்சிக்கு காரணம் அல்ல என்று கூறுகிறார். முதலில் நான் எப்போதும் தலைமை ஆசிரியர்
என்ற தோரணையோடு நடந்து கொள்வதில்லை என்று தொடங்குகிறார். ஒரு உதவி ஆசிரியரிடம் ஒரு
செய்தி சொல்ல வேண்டும் என்றால் கூட இவர் சம்மந்தப்பட்ட ஆசிரியரைக் கூப்பிட்டு அனுப்புவதில்லை.
அந்த ஆசிரியரின் வகுப்பறைக்கு சென்று அந்த விசயத்தைக் கூறுகிறார். விடுப்புத் தேவையா
ஏன்? எதற்கு? இன்று இரண்டு பேர் லீவு. நீங்கள் நாளைக்கு எடுங்கள் என்று சொல்வதில்லை.
ஆனால் இங்கு பணிபுரியும் ஓர் ஆசிரியர் கூட அனுமதிக்கப்பட்ட விடுப்பு முழுவதையும் ஓர்
ஆண்டில் எடுப்பதில்லை. அவசரத் தேவைகள் நிமித்தமே பாடவேளையில் அலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள்.
மதிய உனவு இடைவேளையின் போது இதர அழைப்புகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இந்தப் பள்ளிக்கு
மாறுதலாகி வந்தவுடன் பள்ளிச்சூழல், மாணவர் வருகை, அவர்களது செயல்பாடு, தலைமை ஆசிரியர்
செயல்பாடுகள், உள்ளூர் ஒத்துழைப்பு ஆகியவற்றை பார்க்கும் ஆசிரியர்கள் இயல்பாகவே இதில்
ஒன்றிப் போகிறார்கள். அல்லது இப்பள்ளியில் இருக்கும் வரை முழுமனதுடன் ஒத்துழைக்கிறார்கள்.
குறிப்பிட்ட கால இடைவெளியில்
நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில், காலை உணவின் முக்கியத்துவம், காலைக் கடன்களை
சரிவரச் செய்ய வேண்டியதன் அவசியம், அயோடின் கலந்த உப்பு, பல் துலக்குதல், நகம் வெட்டுதல்
ஆகியவற்றில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்று பயிற்றுவிக்கப்படுகின்றனர். பெற்றோர்களை
எங்கு பார்த்தாலும் நின்று, அந்த மாணவர் பெயரை சொல்லி, அவன் எப்படிப் படிக்கிறான் இன்னும்
வீட்டில் என்ன மாதிரி உதவியாக இருக்கவேண்டும் என்று கலந்துரையாடுகிறார். பெற்றோர் பள்ளிக்கு வந்தால் அமரவைத்து பேசுதல், அவர்கள்
கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் பள்ளியின் சிறப்பு இயல்புகளில் ஒன்று.
மாணவனின் தவறுக்கு ஆசிரியர்களே
காரணம் என்பதில் இவர்கள் அழுத்தம் திருத்தமாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மாணவர்கள்
வகுப்பறையில் பேசிக்கொள்வது, சண்டையிட்டு கொள்வது, என எல்லாமே நாம் அங்கு இருந்தும்
இல்லாதிருப்பதில் விளைவே. நமது கவனம் வேறு திசையில் இருப்பதோ, நமக்கு நண்பர்களோ, பெற்றோரோ
வந்திருக்கும் தருணத்தில், ஆசிரியர் மாணவனை கவனிக்கவில்லை என உணரும்போது வேறு வேலைகளை
மாணவன் செய்யத் தொடங்குகின்றார்ன். ஆசிரியர் வகுப்பறையில் இருக்குபோதே இப்படியெனில்
அதிகபட்சம் பத்து வயது தாண்டாத குழந்தைகள் எப்படியிருக்கும் நினைத்துப் பாருங்கள் என்கிறார்
தலைமையாசிரியர் தங்கராசு. பாடவேளையின் போது கற்றல் செயல்பாடுகளில் நாம் ஈடுபடாமல் இருந்தால்
அக்குழந்தையின் நேரத்தை நாம் திருடிக் கொள்கிறோம் என்பது பொருள். அக்குழந்தையின் நேரத்தை
திருட, வீணாக்க நமக்கு அதிகாரம் அளித்தது யார் என்று அவர்கள் எழுப்பும் கேள்வி நமக்கு
பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.
இப்பள்ளி
மாணவர்களோடும் ஆசிரியர்களிடமும் கலந்துரையாடும்போதும், இப்படியும்
ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்ற பலத்த சந்தேகத்தை
பல சம்பவங்கள் உருவாக்குகிறது. காலையில் தலைமை ஆசிரியர் அறைக்கு கையெழுத்துப்
போடப் போவது கூட
தலைமை ஆசிரியர் நேராக முகத்தைப் பார்க்க மாத்திரமே. நேராக காலை நேரத்தில்
பார்த்துக்கொள்வதும், பேசிக்கொள்வதும்
கூட காலவிரையம் எனக் கருதுகிறார்கள். தினமும் மதிய உணவு இடைவேளை வந்துவிட்டாலே ஐயோ
இன்னும் கொஞ்சம் நேரத்தில் குழந்தைகளை விட்டு பிரியப்போகிறோமே என்ற கவலை
வந்துவிடும் என்கிறார்கள். தொடக்க கல்வியில் இன்று மிக முக்கிய பிரச்சினைகளில்
ஒன்று இந்த CCE முறை. ஆசிரியர்கள்
எழுதுகிறார்கள்,
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். கற்பித்தலை பாதிக்கும் முக்கிய பிரச்னை இது. ஆனால்
இப்பள்ளி ஆசிரியர்கள் இந்தப் பிரச்சனைக்கு தங்கள் கடும் உழைப்பால் மாணவர்கள்
பாதிக்கப்படாமல் செய்கிறார்கள். எல்லா வித எழுத்துப் பணிகளையும் வீட்டுக்கு
எடுத்துசென்று முடித்துவிடுகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்கள் குழந்தைகளிடம் மாலை FEED
BACK பின்னூட்டம் கேட்டு விடுகின்றனர். டீச்சர் இன்னைக்கு நீங்க
சோகமா இருந்தீங்க. இன்னைக்கு நீங்க நடத்தியது புரியல இது மாதிரி நடத்தாதீங்க. நல்ல
நடத்துரீங்க என பளிச்சென கூறிவிடுகின்றனர். அக்குழந்தைகளுக்கு இவ்வுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆண்டு இறுதியிலோ முதலிலோ பள்ளி சேர்ப்பு இயக்கம், செயல்பாடுகள்
உண்டா என்று கேட்டால் எங்கள்
குழந்தைகளே எங்களுக்கு ”கேன்வாஸ்” என பதில் அளிக்கிறார்கள். எங்கள்
பள்ளியில் ஆளுக்கு ஒரு வகுப்பு உண்டு ஆனால் அதே சமயம் இல்லை என்கிறார்கள். அது என்ன என்று
கேட்டால், ஒவ்வொருவருக்கும் ஒரு வகுப்பு
ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் யார் ஒருவரும் இது அவருடையது. இது
என்னுடையது என்னும் பாகுபாடு கிடையாது என்று கூறுகிறார்கள்.
இந்தப் பள்ளியை பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க செயலரிடம்
தெரிவித்தேன். கார்த்திகேயனும் தலைவர் சக்கரவர்த்தியும் உடனடியாக புறப்பட்டு
இருசக்கர வாகனத்திலேயே ஊத்துப்புலிக்காடு
சென்று சேர்ந்தனர். ஈரோட்டில்
இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
இப்பள்ளியின் தூரம் தெரியாமையால் சென்று சேர மாலை நேரம் ஆகிவிட்டது. சார் நீங்கள்
காலையில் வந்து இருந்தால் எங்கள் குழந்தைகள்
சாப்பிடும் அழகை பார்த்திருக்கலாம் என்றனர். சத்துணவு சமைக்கும் ஆயா கூட தனிகவனம்
எடுத்து சமைக்கிறார். குழந்தைகள் வரிசையாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். ஒரே ஒரு
பருக்கைக் கூட சிந்தாமல் சாப்பிடுவர். நாங்களும்
சத்துணவையே சாப்பிடுகிறோம் என்கின்றனர்.
நெடிது உயர்ந்த சுற்றுச்சுவர்.
பள்ளி நிறைந்த பசுமையான மரங்கள். மிகக் குளிர்ச்சியான புங்க மரங்கள், அழகூட்டும் அரளிச்
செடிகள், காந்தி திருவள்ளுவர் விவேகானந்தர் சிலைகள் என அத்துவானக்காட்டில் இப்பள்ளி
அசத்துகிறது. உள்ளடங்கியிருக்கும் இப்பள்ளிக்கு முன்பெல்லாம் அதிகாரிகள் வருவது அரூபம்.
ஆனால் இப்போது இப்பள்ளியைக் காண அதிகாரிகள் வருவது அதிகரித்துள்ளது. நம்மைப் போன்ற
ஆர்வலர்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இப்பள்ளிக்கு இன்னும் போதுமான
ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. கட்டிட வசதியில்லை. அரசு தன் தரப்பிற்கு செய்ய வேண்டிய
பணிகள் நிறைய உண்டு. ஆனால் முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு சான்று, ஊத்துப்புளிக்காடு
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி.
பயணம் தொடரும்…………
படங்கள் உதவி : கார்த்திகேயன், ஈரோடு.
0 comments:
Post a Comment