நண்பர்களே! பொதுப் பள்ளி
முறைக்கு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில் காமராஜரின் கல்விப்பாதை ஒரு குறியீடு.
ஆறாம் வகுப்பு மட்டுமே படித்து பொதுப்பாதை சமைத்த அவரது முக வெளிச்சத்தில் முன்னேறுவோம்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆர்வலர்கள், அனுதாபிகள் என அனைவருமே களத்தில்
இறங்கி பொதுப் பள்ளி முறையைக் காக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அனைத்தையும் செய்யவேண்டியது
அரசாங்கம், நாம் என்ன செய்ய? என்கின்றனர் ஒரு சாரார். எல்லாம் வாத்தியார்களால போச்சு
என்று புலம்புகின்றனர் ஒரு சாரார். இப்படி பல்வகையில் தன்னைவிடுத்து மற்றவர்களை குற்றம்
சொன்ன காலங்கள் இனி கடந்தவையாக இருக்கட்டும். நண்பர்களே! தோழர்களே, போதும். பொதுப்
பள்ளியா!! அது இந்திய நாட்டில் சோசலிசம் மலர்ந்தால் கூட பொதுப்பள்ளி மலர பல பத்தாண்டுகள்
ஆகுமே என்ற அவநம்பிக்கை எவருக்கும் வேண்டாம்.
அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த
ஒரு வலுவான முக்கூட்டணி தேவைப்படுகிறது. ஒன்று அரசு, இரண்டு ஆசிரியர் மூன்று பெற்றோர்.
அரசு என்றால் மக்கள் நல அரசு என்று நாம்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். மக்கள்
நல அரசு என்பது உண்மையெனில் கல்வியும் மருத்துவமும் இவ்வளவு செலவு பிடிக்கக்கூடிய பண்டமாக
மாற்றப்பட்டிருக்குமா? மோடி அரசாக இருந்தாலும் சரி அதற்கு முந்தைய மன்மோகன் அரசாக இருந்தாலும்
சரி. 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை நிச்சயமாய் உண்டு கார்பரேட் கம்பனிகளுக்கு?
ஒரே ஒரு தருணத்தில் தான் நமது ஆட்சியாளர்கள் மக்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். ஓட்டுக்கு
வேட்டு விழும் என்று தெரிந்தால் மட்டுமே பயப்படுவார்கள். அடுத்த தேர்தலுக்கு வாக்குக்
கேட்க வரும்போது “பொதுப்பள்ளி முறையை அமுல்படுத்துவோருக்கு எங்கள் வாக்கு” என்று சொல்லிப்
பாருங்கள். பெரும் பகுதிகளின் குரலாம இந்த மந்திரத்தை ஒலிக்கச் செய்து பாருங்கள். பள்ளிக்
கல்வியில் தலைகீழ் மாற்றம் தானாய் வரும். ”குதிரைக்கு கொம்பு முளைக்கட்டும்” என்று
அவநம்பிக்கையை மீண்டும் துளிர்க்க விடாதீர்கள்.
அரசுப் பள்ளியை வலுப்படுத்துவோம்
என்று யாராவது பேசினால், உடனே “உன் பிள்ளை எங்கே படிக்கிறது” எனக் கேட்டு வாயை அடைத்துவிடுகிறோம்.
அதுவும் இந்தக் குரல் அரசுப் பள்ளி ஆசிரியரின் குரலாக இருந்துவிட்டால் சொல்லவே வேண்டா.
அரசு மருத்துவமனையை வலுப்படுத்து என்று கேட்பவர் அரசு மருத்துவமனைய்லி வைத்தியம் செய்பவராக
இருக்க வேண்டுமா? “ கார் வைத்திருப்பவன் கம்யூனிசம் பேசுகிறான்” என்று சொல்கிறார்கள்.
மாடு வீட்டில் இருந்து கொண்டு குடிசைவாசியைப் பற்றி பேசக்கூடாதா? அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கோ
அரசு ஊழியர்களுக்கோ விதிவிலக்குக் கோரும் நோக்கம் இதுவல்ல. அரசு, ஆசிரியர் பெற்றோர்
என்ற முக்கூட்டணியில் உள்ள அனைவரின் பொறுப்புகளையும் அலசுவோம். இந்த அலசல் வழி நம்மை
நாம் செப்பனிட்டுக் கொண்டு அரசு இயந்திரத்தை அசைப்போம்.
ஆசிரியர்களும், பெற்றோர்களும்
சிவில் சமூகமும் முதலில் நம்மை நாம் கிள்ளிப் பார்த்துக் கொள்வோம். தூக்கத்தில் இருந்து
விழித்து எழுவோம். நம்மை நாமே என்னதான் செய்து கொண்டாலும், நாம் ஒரு சமூக விலங்குதானே.
இந்த சமூகத்தை ஆட்டுவிக்கும் குடும்பம், மதம், கலாச்சாரம், ஊடகங்கள், சாதி ஆகிய நிறுவனங்களை
உலுக்கிப் பார்ப்போம். எதை உலுக்கினாலும் இறுதியாய் நாம் அசைத்துப் பார்க்க வேண்டியது
ஆலமரமாய் நிற்கும் அரசு என்னும் நிறுவனம்தான். அனைவரும் பிடித்து அரசை வலுவாய் உலுக்கும்போது,
அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தமும், பள்ளிக் கல்வியில் வணிகமயத்தைக் கட்டுப்படுத்த
வேண்டிய கட்டாயத் தேவையும் அதனைத் தொடர்ந்து பொதுப்பள்ளி அருகமைப் பள்ளிக்கு வடிவம்
கொடுக்கவேண்டிய சூழலும் கண்டிப்பாய் ஏற்படும்.
ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே
சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கு முன்னர் ஆசிரியர் சங்கங்கள் எடுத்த முன்முயற்சிகளையும்
நினைவு கூற வேண்டியிருக்கிறது.
இனி அடுத்த பதிவில் சந்திக்கலாம்……………
0 comments:
Post a Comment