Friday, August 26, 2016

விஷமத்தனம்மா? விபரம் தெரியவில்லையா? - கே.கே.மகேஷ் அவர்களுக்கான பதில்

புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா? என்ற தலைப்பில் கே.கே. மகேஷ் (தி இந்து 23.08.16) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நல்ல விஷயங்களே இல்லையா? என்ற கேள்வி எழுப்பி அதற்கு விடையாக கணிசமாக நல்லது உள்ளது என்று முடித்துள்ளார்.

கல்வியில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று பள்ளிக் கல்வி. மற்றொன்று உயர் கல்வி. இந்தப் பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு நெருக்கடி நிலை காலத்தில் மாற்றப்பட்டது. இன்று வரை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை. ஒரு மாநில முதல்வராக இருந்து மாநில உரிமைகள் பற்றி பேசிய மோடி பிரதமரான பின்பும் அப்படியே நீடித்தது தவறு என பாஜகவின் ஆதரவாளராக பத்ரி சேஷாத்ரி கூட எழுதியுள்ளார். ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி எண்ணற்ற சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட தேசத்தில் குறைந்தபட்சம் மாநிலத்திற்கு தக்கவாறு கல்விக் கொள்கை என்பதில் மகேஷூக்கு உண்டா இல்லையா என்ற கருத்தை கூட அவர் பதிவு செய்யவில்லை. அவரளவிற்கு இது இரு பிரச்சனையா என்பது போலவே கட்டுரை அமைந்துள்ளது.

அது போகட்டும். அவருக்கு ரொம்பப் பிடித்த ஆசிரியருக்கு சாட்டையடி விஷயத்திற்கு வருவோம். இதைப் பற்றிப் பேசும் போது இந்த மாநில வேறுபாட்டுப் பிரச்சனைக்கு வரவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் நியமனங்கள் பதிவு மூப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட போதும் சரி, TRB, TET என தற்போது நியமிக்கும் முறையிலும் சரி நேர்மையாகவே நடைபெறுகிறதுஎந்தந்த மாநிலத்தில் நியாயமாக நடக்கிறது. எங்கெங்கு மோசடியாக நடக்கிறது என்ற பட்டியல் நம்மிடம் இல்லை. நேர்மையாக நடப்பதையும் சேர்த்து பகடி பேசுவது ஆகாதா? தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டுப்பாருங்கள், அரசுப் ணி ஆசிரியர் திறமை அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதற்கு சாட்சியம் கூறுவர். அதேபோன்று பணியிடைப் பயிற்சி மூன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இல்லை, மாதாமாதம் கடந்த பல ஆண்டுகளாகவே இங்கு நடைபெற்று வருகிறது. இரண்டு நாள், மூன்று நாள் மாதாந்திரப் பயிற்சியும் நடைபெற்றுத்தான் வருகிறது. பயிற்சியின் தன்மை எப்படியுள்ளது, எப்படிக் கொடுக்கிறார்கள்? எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தனிப்பிரச்சனை. தற்போதைய புதிய கல்விக் கொள்கை முன்மொழியும் பயிற்சியும் இதேபோல் தான் அமையும். பணியிடைப் பயிற்சி முன்மொழிவு ஒரு சிறப்பான செயல்பாடு என உச்சிமுகர ஏதும் இல்லை.

மீண்டும் மாநிலப் பிரச்சனையைத் தான் இழுக்க வேண்டியுள்ளது. பணிக்கு வராமலிருப்பதும் தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனையல்ல. வேறு மாநிலங்களில் ல்லாமல் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு சென்றால் தான் அது பற்றி பாதிப்புகள் மாநிலங்களில் பேச முடியும். பெரும்பான்மை ஆசிரியர்கள் பணிக்கு வருவதோடு அல்லாமல் உரிய நேரத்திற்கும் வருகிறார்கள். வேண்டுமானால் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் மகேஷ் ஆய்வு செய்து கூறலாமே.

அடுத்து பணிப் பொறுப்பின்மைக்கு வருவோம். இது ஒரு முக்கியப் பிரச்சனையே. நமது நாடு ஒரு சந்தைப் பொருளாதார நாடு. இதில் இலாபத்திற்காக பல தளங்களில் நேர்மையின்மையை தவறவிட்டு பணம் சம்பாதிக்கும் தேசம். ஆசிரியரிடம் மட்டுமே நாம் தொழில் தர்மம், பொறுப்புணர்வு ஆகியவற்றை எதிர்பார்ப்பது, நினைப்பது சரியா? சேவை மற்றும் தொழில் வர்த்தகத்தில் பொறுப்புணர்வின்மையை தனியாக சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆசிரியர் தொழிலில் மாணவர்கள் தரம் மூலம் பொறுப்பின்மை துருத்திக் கொண்டு தெரிகிறது. கமலஹாசன் ஒரு படத்தில் கூறுவது போல அவர்களை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன் என்று ஆசிரியர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை.

பொதுப் பள்ளி முறை, அருகமைப் பள்ளி முறை நோக்கி ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை இந்த அறிக்கை என்று ஒத்துக் கொள்ளும் மகேஷ், பொதுப்பள்ளி முறைக்கும் கல்வித் தரத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி வாய்திறக்கவில்லை. பொதுப்பள்ளி கொண்டுவரப்படாவிட்டால் இன்றுள்ள அரசுப் பள்ளிகளிலும் கல்வித் தர உயராது. தனியார் பள்ளிகளிலும் கல்வித் தரம் உயராது. ஒரு ஊரில் உள்ள அனைத்து சாதி, மத, ஏழை, பணக்கார நடுத்தர வீட்டுப் பிள்ளைகள் ஒரே பள்ளியில் பயிலும் போது, மகேஷ் மகிழும் எந்த பயோமெட்ரிக் வருகை பதிவும் தேவையில்லை. உள்ளூர் சமூகமே எந்தவித உருட்டல், மிரட்டல், கண்காணிப்பு கருவிகள் இன்றி மாபெரும் எந்திரமாக மாறும். சமூகப் பொறுப்பு இவ்வழியாகவே முழுமையாக மேம்படும்.

அருகமைப் பள்ளி, பொதுப் பள்ளி மலரும் வரை ஆசிரியர்கள் சமூகப் பொறுப்பின்றி இருப்பார்கள். சரி செய்வது இயலாது. கூடாது என்பதும் நாம் வாம் அல்ல, புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டிருக்கும் ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்வு, பரிசோதனை, என்று அணுகாமல் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு கற்றல் அடைவு. இந்த கற்றல் அடைவு குழந்தைக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிற்கு பொறுப்பேற்கும் ஒரு ஆசிரியர் அடுத்து இரண்டு, மூன்று என்று ஐந்தாம் வகுப்பு வரை அக்குழந்தைகளுக்கான கற்றல் அடைவுகளுக்கு அவரே பொறுப்பு, அவரே வகுப்பாசிரியர் எனக் கூறலாம்தவறும் போது தகுந்த பரிகாரங்களை தேடலாம். அதனை விடுத்து குழந்தைக்கு படிப்பு வரவில்லையெனில் பள்ளி விட்டு துரத்துதல், ஆசிரியர் சரியாக பணியினை செய்யவில்லை எனக்கூறி பரீட்சை, டிஸ்மிஸ் என அதிகார மமதை பாணி சரிதானா என்று தயவு செய்து யோசியுங்கள் மகேஷ்.

ஆசிரியர்கள் பரீட்சைக்கு அஞ்சுகிறார்கள் என்று கூறுகீறீர்கள். மகேஷ் நீங்களோ வேறு தேர்ந்த பத்திரிகையாளரோ உங்கள் துறை சார்ந்து நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள் என்பதற்கு என உத்தரவாதம்? நம் தேர்வு முறையும் சரியில்லை. முற்றிலும் மனப்பாடமாக இருக்கிறது மாற்றியமைக்க வேண்டும் என்று கல்விக் கொள்கை முன்மொழிவு கூறுகிறது. ஆனால் ஆசிரியருக்கு தேர்வு வேண்டும்? இல்லையா? உங்களுக்கும் தெரியும் நல்லாசிரியர்கள் தோல்வியடையவும் பொறுப்புணர்வு அற்ற ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவும் ஏராளமான வாய்ப்பு இருக்கிறது.

பதவி உயர்வு தமிழக பள்ளிகளில் பணி மூப்பின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. பதவி உயர்வுக்கு ஐந்தாண்டு என்ற நிபந்தனையெல்லாம் இங்கு தேவையில்லை. இதைப் பேசினால் மீண்டும் மாநிலப் புராணத்தையே இழுக்க வேண்டும். சரி பணி மூப்பு தவிர்த்து பணித்தரத்தின் அடிப்படையில் பதவி உயர்வு என்று நீங்கள் சிலாகிக்கும் விசயத்திற்கும் வருவோம். தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களால் ஒட்டுமொத்த பள்ளிக்கே பெருமை எனவே அவர்களைப் போன்றவர்களுக்கு பதவி உயர்வு தருதல் சாலப் பொருத்தம் என்கிறீர்களே. இவர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி தருவது ஒரு புறம் இருக்கட்டும். இவர்களில் எத்தனை பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி அரசு கௌரவித்து இருக்கிறது? சாதியும், ஜால்ரா, பணம், என எங்கும் வியாபித்திருக்கும் சமூகத்தில் தரம், தகுதி அடிப்படையில் பணி உயர்வு என்பதற்கு என்ன உத்தரவாதம்? தனியார் துறையில் கூட மிகச் சிறந்த வேலைக்காரர்கள் ஆனால் உள்ளது உள்ளபடி முதலாளி உட்பட எல்லோர் மீதும் விமர்சனத்தை முன் வைப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்குமா மகேஷ் கூறுங்கள்? எனவே, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கூறாமல் தகுதி அடிப்படை பணி உயர்வை ஏற்றுக் கொள்ள முடியுமா? இதை சரி செய்யும் வரை பணி மூப்பின் வழி வரும் சில பாதிப்புகளை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

தனியார்மயம் அதிகரித்த பின்னர் தனியார் கல்வி நிறுவனங்களின் வழி பாதிப்புகளே நிரம்ப இருக்கிறது. ஆனால் எத்தனை பேர் வழக்கு மன்றத்திற்கு வருகிறார்கள்? அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தற்போது வரும் வழக்குகளின் தன்மையென்ன? இன்றைய நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை சதவீதம் கல்வி தொடர்பானது? அப்படியிருக்க கல்வி பிரச்சனைகளுக்கெனெ தனி தீர்ப்பாயத்திற்கு செல்லும் ஒருவர் தனக்கு அதில் நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தையே நாடவேண்டும். இது விரைந்து முடிக்கவா அல்லது காலதாமதம் செய்யவா அல்லது  நீதியை மறக்கவா என நீங்களே முடிவு செய்யுங்கள் மகேஷ்.

ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி என்று எங்கேயும் அந்த ஆவணத்தில் இல்லை மகேஷ். அறிக்கையை மீண்டும் ஒரு முறை படியுங்கள். 4.11 கல்வியில் மொழியும் பண்பாடும் என்ற தலைப்பில் கூறப்படும் கொள்கை முனைவு இப்படித்தான் தொடங்குகிறது. விரும்பினால் மாநிலங்களும் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி உள்ளூர் மண்டல மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி அளிக்கலாம் என்றே இருக்கிறது. இதற்குப் பெயர்தான் தாய்மொழி வழிக் கல்வியா? ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வி என்பது எந்த நாட்டுக் கல்வியாளர்கள் கண்டுபிடிப்பு மகேஷ்? குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி முழுவதும் தாய்மொழியில், அத்தோடு அவருக்கு தேவைப்படும் மொழியில் நன்கு பயிற்சி. இவ்விரண்டும் நன்கு கற்றுத் தரப்பட்டு, இருமொழிகளிலும் அவர்கள் தேர்ந்தவர்களாக  இருத்தல் எப்படியிருக்கும்? என சற்று யோசித்து விமர்சனத்தை முன்வையுங்கள். அதற்கு முன்பு உங்கள் பத்திரிகையிலேயே வந்த ஆழி செந்தில்நாதன் அவர்கள் கட்டுரையை கொஞ்சம் படியுங்கள்.

பள்ளி கல்வி முழுவதும் மாநிலத்திற்கு ஏற்றவாறு பாட்த்திட்டம் என்ற வலுவான குரலுக்கு பதில் கூறாமல் இந்தப் பொதுபாடத்திட்டம் ஒருவித வடிகட்டல் அரசியல் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் தர றுத்து, பகடி பேசுதல் முறையா? மாநில அரசு கொண்டுவந்துள்ள சமச்சீர் கல்விக்கும் அகில இந்திய பொதுபாடத்திட்டம் என்ற இரண்டுக்கும் இடையே வேறுபாடு தெரியாத மனிதர் கல்விக் கொள்கை பற்றி முழுமையான விமர்சனத்தை முன்வைக்க முடியுமா?

மகேஷ் வழிமொழியும் இரண்டு மட்டுமே இந்த மொத்தக் கல்விக் கொள்கை முன்வைப்பிலும் சாதகமான அம்சம். அங்கன்வாடிகளை முன்பருவக் கல்வியோடு இணைப்பது மற்றும் சத்துணவு திட்டத்தை விரிவுப்படுத்துதல்இவ்விரண்டையும் கட்டுரையாளாரின் முந்தைய கட்டுரை (விஞ்ஞான சிறகு ஜூலை 2016) மற்றும் பேரா. இராமானுஜம் கட்டுரை கியன ஏற்கெனவே ஆதரித்து எழுதப்பட்டுள்ளன. இவ்விரண்டுக்காக மட்டுமே மொத்த தீமையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

திராவிடக் கட்சிகள் மீதும் கம்யூனிஸ்டுகள் மீதும் பொத்தாம் பொதுவாக வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்குள் நையாண்டிக்குள் செல்ல விரும்பவில்லை. நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி கொள்கையில் சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்குவது போல் பிரிவுகளைச் சேர்த்துவிட்டு அதைக் கண்டு கொள்ளாதே என்றால் எவ்விதமான அனுகுமுறை?

தாய்மொழியை விரும்பினால் படிக்கட்டும் என்பதை மகிழ்ந்து போற்றுவதும், வழக்கொழிந்த மொழி(சமஸ்கிருத) திணிப்பை புத்துயிர் ஊட்டல் என்று மேம்போக்காக கூறிச் செல்வதும் எவ்வளவு ஆபத்தான விஷயம்? இவற்றைத் தெரிந்து எழுதி உள்ளீர்களா? தெரியாமல் எழுதியுள்ளதாக தெரியவில்லை.

இந்தக் கொள்கை வரைவில் உள்ள விசயங்களை எடுத்துக் கொண்டு விமர்சித்தால் கணிசமான நன்மை உண்டு என மகேஷ் முடிக்கிறார். இந்தக் கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள். கூட்டுப்பள்ளிகள் என்ற பெயரில் பள்ளிகள் மூடப்படும். தொடரும் பள்ளி விட்டு விரட்டல், உயர்கல்வியில் இனி அரசு முதலீடுகள் இல்லை, கட்டணத்தை கூட்டு, கனவான்களைச் சென்று கெஞ்சி கல்வி நிறுவனத்தை நடத்து என ஏற்கெனவே இருக்கும் அரசு உயர்கல்வி நிறுவன்ங்களை நிர்ப்பந்திக்கிறதே அது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை மகேஷ்?


ஆசிரியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து கல்விக் கொள்கையில் உள்ள குறைகளைக் களைய களமிறங்கி உள்ளது மகேஷுக்கு தெரியாது போலும்? கல்வித் தரத்தை ஆசிரியர் தேர்வுகள் மூலம் களைந்துவிடலாம் என்ற பரிந்துரையையும் சேர்த்தே எதிர்ப்பார்ப்பார்கள். ஓடி ஒளிந்துகொள்ள மாட்டார்கள். ஒட்டுமொத்த கல்விக் கொள்கையில் உள்ள குறைகளை களைந்திட கோரி இயக்கம் நடத்த துவங்கியுள்ளனர். இந்தப் இயக்கத்தின் மூலம் கல்விக் கொள்கையி உருவாக்கத்தின் போது ஆசிரியர்களை கலந்தே உருவாக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை எதிர்காலத்திற்கு சேர்த்தே உருவாக்குவார்கள். உங்கள் நய்யாண்டி, நப்பாசை பொருளற்று போகும் காலம் வரும். காத்திருங்கள். 

0 comments:

Post a Comment