Sunday, June 15, 2014

இந்திய கல்வி முறையில் PPP என்னும் அடுத்த சீரழிவு

இந்திய கல்வி முறையில் PPP என்னும் அடுத்த சீரழிவு

இந்திய நாட்டின் மையமான அனைத்து துன்ப துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம், “கல்வியறிவு இன்மையேஎன்றார், ரவீந்தரநாத் தாகூர். இதனைப் புரிந்து கொண்டு கல்லாமையை இல்லாமல் செய்திட நம் இந்தியாவில் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது உண்மையே. ஆனால் ஜப்பான் 1868ஆம் ஆண்டிலேயே தனது ஆண்டு வருமானத்தில் 43 விழுக்காட்டை கல்விக்காக ஒதுக்கி, 1893ஆம் ஆண்டில் கல்லாதவர்கள் நிறைந்திருந்த ஜப்பான் நாட்டு ராணுவத்தில் 1906ஆம் ஆண்டில் கற்றவர்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. ஐரோப்பிய நாடுகளைப் போன்று பொருளாதாரத்திலோ, தொழில்துறையிலோ முன்னேறாத காலத்திலேயே ஜப்பான் இந்த சாதனையைப் படைத்தது. இதன் விளைச்சலைத் தான் ஜப்பான் இன்று அறுவடை செய்துகொண்டு இருக்கிறது ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட, சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், தென் கொரியா, தைவான், சிங்கப்பூ, ஹாங்காங், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கும் கல்வியில் அரசின் முதலீடுகளே காரணம் என்கிறனர், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னும், ஜீன் டிரீஸ் என்னும் பொருளாதார வல்லுநரும்.

கல்வியில் பொது முதலீட்டின் பங்கு அத்தியாவசியம் என்பதை சென்னும் டிரீசும் மட்டுமல்லாது பொருளியலின் தந்தை என்று போற்றப்படுகிற ஆடம் ஸ்மித்தும் நன்கு உணர்ந்திருந்தார். “கல்விக்காக செலவிடும் ஒவ்வொரு சிறு தொகையும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளை ஊக்குவிக்கும்என்றார். அரசுப் பள்ளிகளில் குறைபாடுகள்  உண்டு. ஆனால் அதை சரிசெய்யத்தக்கவை. தனியார் பள்ளிகளின் குறைபாடுகள் சரிசெய்ய இயலாதவை. தனியாரிடம் கல்வியென்பது பண்டம். விற்றல், வாங்குதல் இலாபம். பொருளின் தரத்தை சந்தையில் போட்டியே தீர்மானிக்கிறது. கல்வி வணிகப் போட்டியின் தன்மையே வேறு. சந்தைவிதிகளும் கூட கல்வியென்னும் பண்டத்திற்கு பொருந்தாது. எனவே, தனியாரால் தரமான கல்வியை தர முடியாது. தரமான கல்வியென்பது மனப்பாட சக்தியை கூட்டுவதல்ல. படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவது. எவ்வளவு குறைபாடுகள் இருந்தபோதும் அரசுப் பள்ளிகளில் உண்மையான கற்றல் நடைபெறுகிறது. மேலும் தனியார் பள்ளிகள் எந்த ஒழுங்குமுறைக்கும் கட்டுப்படாதவை. இதற்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25% இடங்களை ஏழை மாணாவர்களுக்கு ஒதுக்காததும், அரசு நிர்ணயித்த கட்டணங்களை ஏற்றுக்கொள்ளாததும், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை புறாந்தள்ளுவதுமே இதற்கு சான்று. எனவே, கல்வி தரத்தை அதிகரிப்பதுதான் மத்திய அரசின் நோக்கம் எனில், அதற்கு தனியார்மயம் தீர்வாகாது. கல்வியின் தரத்தை அதிகரிக்கப் போகிறோம் என்ற பெயரில் ஏற்கெனவே உள்ள பொதுப்பள்ளி முறையில் உள்ள குறைகளை களைந்து வலுப்படுத்தாமல் நட்டாற்றில் விட்டுவிட்டு அரசுப் பணத்தில் ஒரு தனியார்மய கல்வித் திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்த இருக்கிறது. அதுதான் PPP (Public Private partnership) என சுருக்கமாக அழைக்கப்படும் அரசு தனியார் பங்கேற்புடன் கூடிய திட்டம்.

இந்த வகை பள்ளிகளின் செயல்பாடுகளை கீழ்வருமாறு மத்திய அரசு வரையறைக்கிறது. இப்பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு நிகரானவை. குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியே இதன் இலக்கு. CBSE கல்வி முறை, பயிற்றுமொழி ஆங்கிலம், 40% மாணவர்களை அரசு நுழைவுத் தேர்வின் மூலம் சேர்க்கும்., 60% மாணவர்களை பள்ளி உரிமையாளர் தன் விருப்பம் போல் சேர்த்துக் கொள்ளலாம். அரசு சேர்க்கும் மாணவர்களுக்கும் 8ஆம் வகுப்பு மேல் கட்டணம் உண்டு. 60 விழுக்காடு மாணவர்களின் கட்டணம், ஆசிரியர்களின் சம்பளம், இதர பணிநிலைகள் எல்லாம் தனியார் விருப்பப்படி அமைத்துக்கொள்ளலாம். பள்ளியை பள்ளிசாரா பணிக்கும் பயன்படுத்தலாம். மத்திய அரசின் மானியம் 10 ஆண்டுகள் மட்டுமே. இப்போதைய நிலையில் மாநில அரசுகளின் பணி நிலம் எடுக்கவோ, ஏற்கெனவே இருக்கும் பள்ளியை ஒப்படைக்கவோ தயாராக இருக்க வேண்டும். பள்ளியின் முழுக் கட்டுப்பாடு பள்ளியின் முழு நிர்வாக மேலாண்மை முழுவதும் தனியாருக்கே சொந்தம். இத்தகைய பள்ளிகள் தமிழ்நாட்டில் 355ம் நாடு முழுவதும் 3162ம் தொடங்கப்படும். தனியார் தங்கள் இஷ்டம் போல் பள்ளிக்கு பெயர் வைத்துக் கொள்ளலாம். பெயருடன் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா என்னும் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே அரசு தனியார் பங்கேற்பு அடிப்படையில் தொடங்கப்படும் மாதிரி பள்ளிகளைப் பற்றிய சுருக்கம். இதனால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளைப் பட்டியலிட்டு கல்வியாளர்கள் மத்திய அரசுக்கு குறிப்பு ஒன்றை சமர்பித்து உள்ளனர். அவை, 1. தனியார் துறை என்பது எல்லாவிதத்திலும் பொதுத்துறையைவிட மேம்பட்டது என்பதை அரசே இத்திட்டத்தின் மூலம் ஒத்துக் கொண்டுள்ளது. 2. அரசுப் பள்ளி முறையென்பது சரிவராது, தனியார் கல்வி முறையே சிறந்தது என அரசே முதல்முறையாக ஒத்துக் கொண்ட திட்டமிது. 3) அனைவருக்கும் சமமான தரமான கல்வித் தரப்படும் என்ற அரசியல் சாசன சட்ட விதி இதன்மூலம்  அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. 4. கல்வியின் நோக்கம், தேசத்தையும் சமூகத்தையும் ஆரோக்கியமானதாக கட்டமைக்கும் செயல்பாடு என்ற அரசியல் சாசனமும் கைவிடப்பட்டுள்ளது. 5) உலகில் எங்கெல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் அஙதிகமாக உள்ளது. அதே சமயம் எங்கெல்லாம் தனியாரிடம் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் குறைவாகவே உள்ளது. 6) இத்திட்டத்தில் தனியார் வணிக நிறுவனங்கள் பங்குபெறலாம் என்பது இந்திய அரசின் அடிப்படை கல்வி கொள்கைக்கும் ஆவணங்களுக்கும் எதிரானது. காரணம் கல்வி ஒரு வணிகப் பொருள் என எங்கும் சொல்லப்படவில்லை. 7) இத்திட்டமே இலாபம் ஈட்டும் துறைகளுக்கானது. இலாபம் வராத துறைகளுக்கு இவற்றைப் பொருத்துவதில் சிக்கல் உள்:ளது.  8) பள்ளிக் கல்வியில் மையமான செயல்பாடுகள் அல்லாத, பள்ளிக்கட்டிடம், பள்ளியின் உபகரணங்கள் ஆகியவற்றையும், பாடதிட்ட வழிமுறைகள், கற்றல் கற்பித்தல், ஆசிரியரின் கல்வி ஆகிய மையமான செயல்பாடுகளையும் ஒரே மாதிரியாகக் கருதமுடியாது. எக்காரணம் கொண்டும் பாடதிட்டம் உள்ளிட்ட மையச் செயல்பாடுகளை வடிவமைக்க தனியாரை அனுமதிக்கக் கூடாது. 9) கல்வி உரிமை சட்டம், தேசிய கலைத்திட்டம் ஆகியவற்றை மீறும் பல அம்சங்கள் இதில் உள்ளது. 10) சமூக பங்கேற்பு என்பதும் சமூக கண்காணிப்பு என்பதும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 10) தனியாரின் கல்வித் தரம், திறமை, சமூகப் பொறுப்பு போன்றவற்றைப் பற்றி அரசு மிகை மதிப்பீடு கொண்டிருக்கிறது. 11) தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைகளை மீறுவது என்பது மாநகரங்களில் கூட ஒரு சர்வசாதாரண நிகழ்வு. இந்நிலையில் அரசுப் பணத்தையும், நிலத்தையும் கொடுத்து தனியாரை நிர்வகிக்க சொல்வது விதிமுறை மீறலுக்கு மட்டுமல்ல, நீதித்துறையில் கூட இவர்களது ஒழுங்கு முறை மீறல்களைக் கட்டுப்படுத்த முடியாது. 12) இத்திட்டம் கட்டற்ற லஞ்ச லாவண்யத்தை ஊடுறவச் செய்து சொல்லொண்ணா விளைவுகளை சமூகத்தில் உருவாக்கும். 13) ஜனநாயக நாடுகளில் தற்காலிக நிதிப் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பானதே. இதனைப் பயன்படுத்திக் கொண்டு கல்வித்துறையில் தனியார்மயத்திற்கு வித்திடுவது, அளவிடமுடியாத, சரிசெய்ய இயலாத விளைவுகளை இந்தியக் கல்வி முறையில் உருவாக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் தந்துள்ள  இக்குறிப்புகள் புறந்தள்ளிவிடமுடியாத இருப்பினும், அரசு புறந்தள்ளியுள்ளது.

இந்திய நாட்டில் அவசரநிலை என்னும் இருண்ட காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டதனால் ஏற்பட்ட பல பாதகங்களில் ஒன்றுதான் இந்த திட்டம். “நாங்கள் கொண்டுவரும் இவ்வகை மாதிரிப் பள்ளிகளுக்கு நிலம் அளந்து கொடு. பத்தாண்டுகள் கழித்து இத்திட்டத்தை நாங்கள் கைகழுவும் போது அதற்கான நிதிச்சுமையை நீயே ஏற்றுக்கொள்” என்ற அதிகார தோரணையைக் மாநில அரசிடம் மத்திய அரசு காட்டுகிறது. மாநில அரசு என்பது மத்திய அரசின் உதவியாளர் என்ற பாணியில் நடத்துகிறது. எனவேதான் மாநில அரசுகளின் கருத்தைப் பற்றி. சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் மைய அரசு வேகமாக இயங்குகிறது. மைய அரசு பள்ளிகல்வி வளர்ச்சிக்கு செய்ய வேண்டியதெல்லாம் மாநிலங்களுக்கு  நிதியை பகிர்ந்து அளிப்பது மட்டுமே. அதேபோல், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையான பன்முகத் தன்மை, பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாட்டில் CBSE என்னும் ஒற்றைக் கல்விமுறையை நடைமுறைப்படுத்த முனைவது தவறு என நடுவண் அரசு உனர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. இன்று இயங்கிவரும் எந்தப் பள்ளியும் பள்ளியல்ல, இனி வரவிருக்கும் பள்ளிகேளே பள்ளிகள் என்னும் தொனியை மாதிரிப் பள்ளிகள் என்ற அறிவிப்பு தோற்றுவிக்கிறது. வருடம் ஒன்றுக்கு ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கார்பரேட் வணிக நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை அள்ளித் தருகிற அரசு. கனிம வள மேலாண்மையில் தனியார்மயமாக்கல் கொள்கை வழியாக சட்டரீதியாகவும், சட்டத்திற்கு புறம்பான வழிகளிலும் பல இலட்சம் கோடி ரூபாய்களை அதே கார்பரேட் நிறுவனங்களுக்கு கொட்டிக் கொடுக்கிறது. இதன் ஒருபகுதியே, PPP என்னும் பெயரில் மக்கள் வரிப்பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் இத்திட்டம்.

 உலகில் முன்னேறிய நாடுகள் மட்டுமல்ல, ஏழை நாடுகள்கூட கல்வியில் நம்மைவிட அதிகமாக கல்வியில் முதலீடு செய்கிறது. ஆப்பிரிக்க நாடுகள் 16ஐ பட்டியலின்படி, அந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியும் தனிநபர் வருவாயும் நம் நாட்டைவிட பன்மடங்கு குறைவு எனக் கூறிவிட்டு, அந்நாடுகளின் சமூக வளர்ச்சிக் குறியீடுகளும் மனிதவள மேம்பாடும் நம்மைவிட பன்மடங்கு அதிகம் என சென்னும் டிரீசும் An Uncertain glory  என்னும் நூலில் வழியாக ஓங்கிக் குட்டுகிறார்கள். ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் என்னும் ஒன்றை அளவீட்டில் கூட நாம் இன்னும் எத்தியோப்பியாவைக்கூட எட்டிப்பிடிக்க முடியாதது போன்றவையெல்லாம் தற்போதைய மத்திய அரசின் அக்கறையில் இல்லை. கட்டற்ற தனியார்மயத்தில்தான் மக்கள் நலன் மலரும் என்ற மூடநம்பிக்கையில் மத்திய அரசு ஆழமாக மூழ்கியுள்ளது. பொதுப்பள்ளி முறையை தனியார் பள்ளிகள் சீர்குலைத்தது என்றால் தற்போது வரவிருக்கும் பள்ளிக் கல்வி முறையானது குற்றுயிரும் குலையிருமாக அதனை மாற்றிவிடும். கல்வியின் தரத்தை கூட்டுவதென்பது கட்டுரையின் தொடக்கத்தில் குறிபிட்டுள்ளதைப் போன்று பொதுப்பள்ளி முறையை வலுப்படுத்துவதே. நாட்டின் உண்மையான வளர்ச்சி மக்களின் முன்னேற்றம் வேண்டுவோர் அனைவரும் மத்திய அரசின் இந்த அபாயகரமான முயற்சியை ஒத்த குரலில் எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

முனைவர் நா. மணி
பேராசிரியர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி,
ஈரோடு 
இக்கட்டுரை ”தி இந்து” நாளிதழில் வந்தது. 

0 comments:

Post a Comment